அம்மாப்பேட்டை வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்


அம்மாப்பேட்டை வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2019 10:45 PM GMT (Updated: 29 Aug 2019 7:22 PM GMT)

அம்மாப்பேட்டை வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

அம்மாப்பேட்டை,

அம்மாப்பேட்டை வட்டாரத்தில் 2019-20-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான விழிப்புணர்வு கூட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் நடந்தது.

கூட்டத்தில் தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர்(உழவர் பயிற்சி நிலையம்) மதியரசன் பேசியதாவது:-

ஒருங்கிணைந்த பண்ணையம் ஒரு வாழ்க்கை முறையாக பழைய காலங்களில் இருந்து விவசாயிகளால் வழங்கப்பட்டு வந்தது. கால மாற்றங்களினால், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் உள்ள சில உட்கூறுகள் மட்டுமே பெருவாரியான விவசாயிகளால் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வேலைவாய்ப்பு, நிரந்தர வருமானம், வேளாண் இடுபொருட்களில் தன்னிறைவு அடைவது ஆகிய குறிக்கோள்கள் கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தகுதிகள்

குறைந்தபட்சம் 1 எக்டேர் சொந்த நிலம் உள்ள ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து செயல்படுத்திட ஆர்வம் கொண்ட சிறு, குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரலாம். விவசாயியின் தாய்-தந்தை, மகன்-மகள், மனைவி-கணவன் ஆகிய எவரும் அரசு வேலையில் இருக் கக்கூடாது. ஒருங்கிணைந்த பண்ணையத்தின் எந்த உட்பிரிவுகளும் தேர்வு செய்யப்படும் விவசாயியிடம் இருக்கக்கூடாது. வேளாண்மை அலுவலர், தோட்டக் கலை அலுவலர், கால்நடை மருத்துவர் ஆகியோர் கொண்ட தொழில்நுட்ப குழுவினரின் உதவியோடு தகுதியுள்ள விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர்.

மானியமாக 50 சதவீத தொகை

இந்த திட்டத்தில் வரப்பு பயிருடன் கூடிய வேளாண் பயிர்கள் 1 எக்டேர், கறவை பசு அல்லது 2 எருமைகள், 10 வெள்ளாடுகள், 20 நாட்டுக்கோழிகள், நிரந்தர மண்புழு உர தயாரிப்பு தொட்டி 10 அடிக்கு 8 அடி, 3 தேனீப்பெட்டிகள், 300 பழமரக்கன்றுகள், தீவன புல் கரணைகள், தீவன மரங்கள் 70 சென்ட் ஆகியவை கொண்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பை விவசாயிகள் தங்கள் செலவில் அமைத்து செயல்விளக்கம் அமைக்க வேண்டும்.

வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர், கால்நடை மருத்துவர் ஆகியோர் கொண்ட தொழில்நுட்ப குழுவினரின் உதவியோடு இந்த செயல்விளக்கம் அமைக்கப்படும். உரிய பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். பின்னேற்பு மானியமாக 50 சதவீத தொகை உரிய ஆய்வுகளுக்கு பின் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓய்வூதிய திட்டத்தில்...

அம்மாப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா பேசுகையில், சிறு, குறு விவசாயிகள் அனைவரும் பாரத பிரதமரின் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும். 18 முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் அவர்களது 60 வயது வரை மாதம் ஒரு சிறு தொகையை செலுத்தி வந்தால் 60 வயதுக்குப்பின் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக கிடைக்கும். அவரது காலத்திற்கு பின் அவரது வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர விரும்பும் சிறு, குறு விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம் இவற்றுடன் அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் ராஜதுரை, உதவி அலுவலர்கள் சூரியமூர்த்தி, வரதராஜன், சிங்காரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story