ராமேசுவரத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற மீனவர்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் வேலை நிறுத்தம் வாபஸ்


ராமேசுவரத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற மீனவர்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் வேலை நிறுத்தம் வாபஸ்
x
தினத்தந்தி 29 Aug 2019 10:45 PM GMT (Updated: 29 Aug 2019 9:45 PM GMT)

ராமேசுவரத்தில் மீனவர்கள் ரெயில் மறியலுக்கு முயன்றனர். மேலும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.

ராமேசுவரம்,

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும், தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும், சேதமான படகுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்கும் இலங்கை அரசின் முடிவை கைவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்கள் பிடித்து வரும் சூடை, காரல் மீன்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23-ந்தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி புறப்பட்டு செல்லும் விரைவு ரெயிலை மறித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.

இதன்படி நேற்று ரெயில் மறியல் செய்வதற்காக மாலை 3 மணியளவில் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் சங்க தலைவர்கள் என்.ஜே.போஸ், தேவதாஸ், எமரிட், சேசு, சகாயம், தட்சிணாமூர்த்தி, தி.மு.க. நகர் செயலாளர் நாசர்கான், காங்கிரஸ் நகர் தலைவர் ராஜாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர் செயலாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி செந்தில், ம.தி.மு.க. கராத்தே பழனிசாமி உள்ளிட்ட கட்சி பிரமுகர்களும், ஏராளமான மீனவர்களும் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து என்.எஸ்.கே. வீதியில் உள்ள தேவர் சிலை அருகே போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில் குமார், திலகராணி, சந்தனமாரி மற்றும் போலீசார் சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து ஊர்வலமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.

அதனை தொடர்ந்து தாசில்தார் அப்துல் ஜப்பார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பதாக உறுதிஅளித்தனர். அதனை தொடர்ந்து மீனவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் சங்க தலைவர்கள் தெரிவித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து நாளை (சனிக்கிழமை) முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

Next Story