நாகை அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி கூடம் கட்டும் பணி - கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு


நாகை அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி கூடம் கட்டும்  பணி - கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு
x
தினத்தந்தி 30 Aug 2019 10:30 PM GMT (Updated: 30 Aug 2019 7:35 PM GMT)

நாகை அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி கூடம் கட்டும் பணியை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்,

நாகை பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது,

திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், சுற்றுச்சுவர் ஆகிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், திட்டச்சேரியில் ரூ.21 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கிராமப்புற கால்நடை மருந்தக கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து நாகையில் ரூ.15 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 62 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், நாகை மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் செவிலியர் பயிற்சி கூடம் மற்றும் தங்கும் விடுதிகளின் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அப்போது கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன், உதவி செயற்பொறியாளர்கள் நாகவேலு, பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story