மனைவியை கொலை செய்தது எப்படி? கணவர் போலீசில் வாக்குமூலம்


மனைவியை கொலை செய்தது எப்படி? கணவர் போலீசில் வாக்குமூலம்
x
தினத்தந்தி 30 Aug 2019 11:15 PM GMT (Updated: 30 Aug 2019 8:46 PM GMT)

மனைவியை கொலை செய்தது எப்படி? என்பது குறித்து கைதான கணவர் சக்திவேல் போலீசில் வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-



ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் மருந்து அடிக்கும் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வேலைக்கு வந்த கவுசல்யா என்பவரை பார்த்து பேசி நட்பாக பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து சக்திவேலும், கவுசல்யாவும் திருமணம் செய்து கொண்டு, அங்கு உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு அபிராமி என்கிற பெண் குழந்தை உள்ளது. மருந்து அடிக்கும் வேலைக்கு செல்வதால் சக்திவேல் மாலையில் வீடு திரும்பியதும் மது அருந்தி விட்டு வந்து சாப்பிட்டு தூங்குவது வழக்கம்.

இதற்கிடையில் மனைவி கவுசல்யா இரவு நேரங்களில் வெளியில் சென்று விட்டு வருவதாக தெரிகிறது. இதனால் நடத்தையில் சந்தேகப்பட்டு கவுசல்யாவிடம், சக்திவேல் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி இரவு வழக்கம் போல் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது கவுசல்யா, சக்திவேலை தாக்கியதால், ஆத்திரம் அடைந்த சக்திவேல் கவுசல்யாவை அடித்து, உதைத்ததாக தெரிகிறது. வலி தாங்க முடியாமல் கவுசல்யா ஓடிய போது, அருகில் கிடந்த கல்லை எடுத்து வீசினார். இதில் கவுசல்யாவில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் கீழே விழுந்தார்.

அதன்பிறகு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, உடலை சாக்கு பையில் வைத்து மூட்டை கட்டி உள்ளார். பின்னர் வாகனத்தில் உடலை கொண்டு வந்து கிணற்றில் வீசி உள்ளார். சக்திவேல் அந்த பகுதியில் சிறு வயதில் இருந்து வசித்து வருவதால் அந்த கிணறு தெரிந்து உள்ளது. வெளி ஆட்கள் சென்றால் அந்த கிணற்றை எளிதில் அடையாளம் காண முடியாது. அந்த அளவுக்கு அதில் செடிகள் வளர்ந்து உள்ளன. மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்த சக்திவேலிடம் தனிப்படை போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story