2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 30 Aug 2019 10:00 PM GMT (Updated: 30 Aug 2019 8:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரின் மகன் சீனு என்ற இந்திரன் (வயது 24). இவர் மீது தென்பாகம் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது இவர் ஒரு குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரிக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர், குண்டர் சட்டத்தில் இந்திரனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், இந்திரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று காலையில் வழங்கினார்.

அதே போல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதிநகரை சேர்ந்த செல்வராஜ் மகன் ஹரிமாதவன் என்ற அப்பாஸ் (23), கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டார். இதனையடுத்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, அப்பாஸை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.

Next Story