வெவ்வேறு ரெயில் விபத்துகளில் 4 பேர் சாவு


வெவ்வேறு ரெயில் விபத்துகளில் 4 பேர் சாவு
x
தினத்தந்தி 30 Aug 2019 10:15 PM GMT (Updated: 30 Aug 2019 11:05 PM GMT)

வெவ்வேறு ரெயில் விபத்துகளில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜோலார்பேட்டை, 

ஜார்கண்ட் மாநிலம், பெண்டோரா பகுதியை சேர்ந்தவர் பர்விந்திதாரா (வயது 24). இவர், கேரள மாநிலம் ஆலப்புழை நோக்கி செல்லும் ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார். பச்சகுப்பம் - ஆம்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டிருந்த போது திடீரென பர்விந்திதாரா படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

ஜோலார்பேட்டை - கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்ற ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அரக்கோணம் தய்யபாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் பழனிவேல் (23). இவர், பெங்களூருவுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு ரெயிலில் சென்றார். வளத்தூர் ரெயில் நிலையம் யார்டில் ரெயில் சென்று கொண்டிருந்த போது படிக்கட்டில் இருந்து பழனிவேல் தவறி விழுந்து உயிரிழந்தார்.

குடியாத்தம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தசரதன் மகன் ரூபன் (14). இவர், மேல்ஆலத்தூர் ரெயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்துகள் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story