முத்தூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதல்; மொடக்குறிச்சி தம்பதி பலி


முத்தூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதல்; மொடக்குறிச்சி தம்பதி பலி
x
தினத்தந்தி 30 Aug 2019 11:29 PM GMT (Updated: 30 Aug 2019 11:29 PM GMT)

முத்தூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் மொடக்குறிச்சி தம்பதி பலியானார்கள். குல தெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

முத்தூர்,

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள வடக்கு பொன்னம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 54). மொடக்குறிச்சி ஒன்றியம் ஈஞ்சம்பள்ளி ஊராட்சி அ.தி.மு.க. கிளை செயலாளரான இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உத்தமி (43). இவர்களுக்கு நித்யா (24) என்ற மகள் உள்ளார். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே மாந்தபுரத்தில் உள்ள நாட்ராயசாமி கோவில் இவர்களுடைய குல தெய்வ கோவிலாகும். இந்த நிலையில் நேற்று அமாவாசை என்பதால் குல தெய்வ கோவிலில் சாமி தரினம் செய்ய மனோகரன் முடிவு செய்தார். அதன்படி மனோகரன் தனது மனைவி உத்தமியை ஸ்கூட்டரில் நாட்ராயன் கோவிலுக்கு அழைத்து வந்தார். ஸ்கூட்டரை மனோகரன் ஓட்டினார். பின் இருக்கையில் உத்தமி அமர்ந்து இருந்தார்.

பின்னர் கணவன், மனைவி இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் தனது ஊருக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றனர்.

இவர்களுடைய ஸ்கூட்டர் முத்தூர்-ஈரோடு சாலை செங்கோடம்பாளையம் பிரிவு அருகே மதியம் 2 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டில் இருந்து முத்தூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார், மனோகரன் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. ஆனாலும் அந்த கார் நிற்காமல், சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீதும் மோதி நின்றது. இதில் மின் கம்பம் கார் மீது விழுந்தது.

இந்த விபத்தில் ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த உத்தமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயம் அடைந்த மனோகரனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மனோகரனும் உயிரிழந்தார்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான உத்தமி மற்றும் மனோகரனின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அ.தி.மு.க.வை சேர்ந்த சிவசுப்பிரமணியம் எம்.எல்.ஏ. காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சென்று மனோகரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஸ்கூட்டரில் வீ்ட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது கார் மோதி அ.தி.மு.க. கிளை செயலாளர் மனைவியுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story