நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு இன்று முதல் தடை: மாற்று ஏற்பாடாக குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைப்பு


நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு இன்று முதல் தடை: மாற்று ஏற்பாடாக குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைப்பு
x
தினத்தந்தி 31 Aug 2019 10:45 PM GMT (Updated: 31 Aug 2019 5:19 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக குடிநீர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரி 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டது. நீலகிரியின் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கடந்த மே மாதம் 29-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு உள்ள குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து உத்தரவை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

நீலகிரி மாவட்ட எல்லைகளில் அமைந்து உள்ள பர்லியார், குஞ்சப்பனை, கக்கனல்லா, நாடுகாணி, தாளுர், சோளாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு, கெத்தை உள்பட அனைத்து சோதனைச்சாவடிகள்(மாவட்டத்தின் நுழைவுவாயில்) முதல் ஊட்டி வரையிலான நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதை நடைமுறைப்படுத்தும் வகையில், மறுசுழற்சி செய்யக்கூடிய பாட்டில்கள் மற்றும் கேன்களை குடிநீர் பாட்டில்களுக்கு மாற்று பொருளாக பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகள், சுற்றுலா தலங்கள், பொது இடங்களில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில், சுத்திகரிக்கும் குடிநீர் எந்திரங்களை பொருத்தவும், அடுத்த கட்டமாக அனைத்து இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், முதல் கட்டமாக குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் கடந்த மாத தொடக்கத்தில் தொடர் கனமழை பெய்ததால் வெள்ள பாதிப்புகள் பெரிதும் ஏற்பட்டன. இதனால் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சுதந்திர தினம் முதல் தடை செய்வதை அமல்படுத்த முடியாமல் போனது. மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால் 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை விற்க மற்றும் பயன்படுத்த தடை அமலுக்கு வருகிறது. நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள் போன்ற அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் உணவுபொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஊட்டி மத்திய பஸ் நிலையம் உள்பட பல இடங்களில் பொதுமக்களுக்காக விற்பனை செய்யப்படும் தமிழக அரசின் அம்மா குடிநீர் பாட்டில்களும் விற்பனை செய்யப்படாது. இதையடுத்து பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடாக ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, மத்திய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், சேரிங்கிராஸ், பிங்கர்போஸ்ட் உள்பட மாவட்டம் முழுவதும் 70 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவை இன்று முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. ஐந்து ரூபாய் நாணயத்தை செலுத்தினால், சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீரை பிடித்துக்கொள்ளலாம்.

Next Story