மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி


மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 31 Aug 2019 11:00 PM GMT (Updated: 31 Aug 2019 6:21 PM GMT)

மடத்துக்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

மடத்துக்குளம்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா புஸ்பத்தூர் கிராமம் கண்டிய கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 39). இவர் கோவையில் உள்ள எல்.ஜி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

இவரும் இவருடைய நண்பரான முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த ரமேஷ்குமாரும் ( 42) ஒரு மோட்டார் சைக்கிளில் கண்டிய கவுண்டன்புதூரில் இருந்து மடத்துக்குளத்திற்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஓட்டினார். பின் இருக்கையில் ரமேஷ்குமார் அமர்ந்து இருந்தார். இவர்களுடைய மோட்டார் சைக்கிள் மடத்துக்குளம் அருகே உள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது அவர்களுடைய மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் லாரி ஒன்று, பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந் தது. இந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சதீஷ்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சதீஷ்குமார் மற்றும் ரமேஷ்குமார் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மடத்துக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த சதீஷ்குமார் மற்றும் ரமேஷ்குமார் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான சதீஷ்குமாருக்கு லட்சுமி(32) என்ற மனைவியும், ராஜேஸ்குமார் (12) என்ற மகனும் உள்ளனர். அதே போல் விபத்தில் இறந்த ரமேஷ்குமாருக்கு உமா மகேஸ்வரி (32) என்ற மனைவியும், ஸ்ரீநிதி (8) மற்றும் இரட்டை குழந்தைகளான அஸ்திஸ் (6), அனுஷா (6) ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

Next Story