பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து வங்கி ஊழியர்கள் பணிபுரிந்தனர்


பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து வங்கி ஊழியர்கள் பணிபுரிந்தனர்
x
தினத்தந்தி 31 Aug 2019 11:00 PM GMT (Updated: 31 Aug 2019 8:57 PM GMT)

பொதுத்துறை வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் கருப்பு ‘பேட்ஜ்‘ அணிந்து பணிபுரிந்தனர்.

நாகர்கோவில்,

10 பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் நாடு முழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கருப்பு ‘பேட்ஜ்‘ அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து பணிபுரிந்தார்கள். நாகர்கோவில் கேப் ரோடு, மீனாட்சிபுரம் போலீஸ் ஸ்டேஷன் ரோடு, கோர்ட்டு ரோடு, வடசேரி டிஸ்ட்டில்லரி ரோடு, கே.பி.ரோடு, ராமன்புதூர், கோட்டார் பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் அனைத்திலும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டார்கள்.

கருப்பு ‘பேட்ஜ்’

இந்த போராட்டம் தொடர்பாக வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் கூறியதாவது:-

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டிக்கும் விதமாகவும் இன்று ( நேற்று) வங்கிகளின் ஊழியர்களும், அதிகாரிகளும் கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து பணியாற்றுகிறோம்.

குமரி மாவட்டத்தில் ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் மொத்தம் 320 உள்ளன. இவற்றில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 1480 பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் 920 பேர் பெண்கள் ஆவர். இந்த போராட்டத்தில் வங்கி உதவியாளர் முதல் உயர் அதிகாரிகள் வரை பங்கேற்றுள்ளனர். அடுத்தகட்ட போராட்டம் குறித்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்க உயர்மட்ட நிர்வாகிகள் முடிவு செய்து அறிவிப்பார்கள். அதன்படி போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story