ஏரியூர் அருகே, காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் பலி


ஏரியூர் அருகே, காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் பலி
x
தினத்தந்தி 31 Aug 2019 10:15 PM GMT (Updated: 31 Aug 2019 9:14 PM GMT)

ஏரியூர் அருகே பாட்டியுடன் துணிதுவைக்க சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பண்ணவாடியான்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி நித்யா. இவர்களது மகள் நவநீதா (வயது 13). இதேபகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவருடைய மனைவி சுதா. இவர்களது மகள் பூவிழி (13). இவர்கள் 2 பேரும் நெருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். இதில் சுரேசும், நாகேசும் அண்ணன்-தம்பிகள் ஆவர்.

இந்தநிலையில் நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாணவிகள் 2 பேரும் தனது பாட்டி சரோஜாவுடன் அங்குள்ள காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்றனர். பின்னர் மாணவிகள் 2 பேரும் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது மாணவிகள் 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கினர். இதனைக் கண்ட மாணவிகளின் பாட்டி சரோஜா அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக ஏரியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது மாணவிகள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Next Story