டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 26,288 பேர் எழுதினர் 5,364 பேர் வரவில்லை


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 26,288 பேர் எழுதினர் 5,364 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 1 Sep 2019 11:00 PM GMT (Updated: 1 Sep 2019 7:47 PM GMT)

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 26,288 பேர் எழுதினர். 5,364 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அரியலூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்தப்படும் பல்வேறு பணிகளுக்கான குரூப்-4 எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 47 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 54 மையங்களிலும் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய 4 தாலுகாக்களில் இந்த தேர்வினை எழுத 14,052 பேரும், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4 தாலுகாக்களில் 17,600 பேரும் தகுதி பெற்றிருந்தனர். தேர்வு எழுதுவதற்கு தேர்வர்கள் காலை 9.30 மணிக்கு மையங்களுக்குள் சென்றனர். முன்னதாக அவர்களின் தேர்வு மைய அனுமதி சீட்டினை (ஹால் டிக்கெட்) மைய அலுவலர்கள் சரிபார்த்தும், அவர்களை சோதனையிட்ட பிறகே உள்ளே அனுமதித்தனர். இதையடுத்து 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டதும், தேர்வர்கள் விடைத்தாளில் தேர்வு எழுத ஆரம்பித்தனர். மதியம் 1 மணிக்கு தேர்வு முடிவடைந்தது.

26,288 பேர் எழுதினர்

பெரம்பலூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வினை 11,525 பேர் எழுதினர். 2,527 பேர் தேர்வு எழுத வரவில்லை. அரியலூர் மாவட்டத்தில் 14,763 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 2,837 பேர் தேர்வு எழுத வரவில்லை. பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் குரூப்-4 தேர்வினை மொத்தம் 26,288 பேர் எழுதினர். 2 மாவட்டங்களிலும் தேர்வு எழுத மொத்தம் 5,364 பேர் வரவில்லை. தேர்வுகளை கண்காணிப்பதற்காக முதன்மை கண்காணிப்பாளர்கள், நடமாடும் குழுக்கள், பறக்கும் படைகள் மற்றும் மைய அலுவலர்கள் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வு நடவடிக்கைகளை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. தேர்வுத்தாள், வினாத்தாள் உள்ளிட்ட தேர்வுக்குரிய பொருட்களை தேர்வு கூடங்களுக்கு பாதுகாப்பாக எடுத்து செல்வதற்காக வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு, அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அந்த பணிகளில் ஈடுபட்டனர்.

செல்போன் கொண்டு செல்ல தடை

தேர்வு மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் தேர்வர்கள் கொண்டு வந்த செல்போன் மற்றும் கைப்பைகள் தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேர்வு முடிந்தவுடன் அவர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு மையத்திலும் உடனடி சிகிச்சை அளிக்க டாக்டர் மற்றும் செவிலியர் கொண்ட மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அரியலூர் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை கலெக்டர் டி.ஜி.வினய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தேர்வினை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் தேர்வு மையங்களில் தேர்வு எழுத முடியாத சூழலிலிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுத தனியாக ஆசிரிய- ஆசிரியைகள் சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் அந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதி கொடுத்தனர்.

Next Story