திருப்பூரில், தி.மு.க. பிரமுகர் கொலை: வட்டிக்கு பணம் கொடுக்காததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்


திருப்பூரில், தி.மு.க. பிரமுகர் கொலை: வட்டிக்கு பணம் கொடுக்காததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 2 Sep 2019 11:45 PM GMT (Updated: 2 Sep 2019 6:56 PM GMT)

திருப்பூரில் வட்டிக்கு பணம் கொடுக்க மறுத்ததால் தி.மு.க. பிரமுகரை தீர்த்து கட்டி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் வஞ்சிப்பாளையம் ரோடு அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது28). இவர் அண்ணா காலனி பகுதி தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் ஆவார். இவர் காலேஜ் ரோடு காவிரி வீதியில் ஒரு கட்டிடத்தில் மேல்மாடியில் 4 ஆண்டுகளாக வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். போலீஸ் நண்பர்கள் குழுவில் இவர் பணியாற்றியுள்ளார்.

இவருடைய நிறுவனத்தில் அவருடைய அண்ணன் காளிமுத்து(31) மற்றும் நாகராஜ் என்பவரும் வேலை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது நிறுவனத்தில் கடன் பெற்றவர்களிடம் காளிமுத்துவும், நாகராஜூம் பணத்தை வசூலித்து விட்டு இரவு 8 மணிக்கு நிறுவனத்துக்கு வந்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது பாலமுருகன் நிதி நிறுவனத்தில் இருந்து வெளியே வந்து ரோட்டில் நடந்து வந்துள்ளார்.

காவிரி வீதி பிரிவில் அவர் நடந்து வந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் திடீரென்று பாலமுருகனை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளளர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாலமுருகனை சரமாரியாக அவர்கள் வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, பாலமுருகனை சரமாரியாக வெட்டி விட்டு 4 பேரும் தப்பி னார்கள்.

அப்போது அங்கு வந்த காளிமுத்து ஓடிச்சென்று பார்த்தபோது, தலை, கழுத்து மற்றும் கைகளில் பலமாக வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். போலீஸ் துணை கமி‌‌ஷனர் உமா சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து காளிமுத்து அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். இதில் கொலையாளிகள் அடையாளம் மற்றும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பாலமுருகனிடம், ராயபுரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ரூ.10 ஆயிரம் வட்டிக்கு கேட்டுள்ளார். அதற்கு தெரிந்த நபர்கள் வந்து யாராவது உறுதி கூறினால் பணம் கொடுப்பதாக பாலமுருகன் கூறி, விக்னேஸ்வரனுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இந்தநிலையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒருவர் விக்னேஸ்வரன் என்பது அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மீது ஏற்கனவே திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொலைமுயற்சி வழக்கு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர். விக்னேஸ்வரனை பிடித்து விசாரித்தால் தான் கொலைக்கான முழு விவரம் தெரிய வரும்.

கொலையாளிகளை பிடிப்பதற்காக வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தொடர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story