கொடைக்கானலில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்


கொடைக்கானலில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 2 Sep 2019 10:45 PM GMT (Updated: 2 Sep 2019 8:24 PM GMT)

கொடைக்கானலில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அவ்வப்போது சாரல் மழையும், பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக நட்சத்திர ஏரி நிரம்பி வழிகிறது. ஆனால் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் நகர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் தாமதப்பட்டு வருகிறது. இதனிடையே கொடைக்கானல் அண்ணாநகர் மற்றும் இந்திரா நகர் பகுதிகளுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலை கொடைக்கானலில் உள்ள வத்தலக்குண்டு சாலையில் கல்லறை மேடு என்ற பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் கொடைக்கானலில் மேடான பகுதியில் வசிப்பவர்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story