துறையூர் அருகே, லாரி சக்கரத்தில் சிக்கி பேத்தியுடன் பெண் பலி - கணவர், மகன் படுகாயம்


துறையூர் அருகே, லாரி சக்கரத்தில் சிக்கி பேத்தியுடன் பெண் பலி - கணவர், மகன் படுகாயம்
x
தினத்தந்தி 2 Sep 2019 10:00 PM GMT (Updated: 2 Sep 2019 8:31 PM GMT)

துறையூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பேத்தியுடன் பெண் பலியானார். அந்த பெண்ணின் கணவரும், மகனும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

துறையூர், 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சை மலையில் உள்ள கோம்பை ஊராட்சியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 60). இவருடைய மனைவி பூஞ்சோலை (55), இவர்களின் மகன்கள் சத்தியராஜ் (30), ராமராஜ் (28). மகள் கல்யாணி (32). கல்யாணி பச்சை மலையில் இலுப்பூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சத்தியராஜ் தனது தந்தை, தாய் மற்றும் தம்பியின் மகள் ஜனனி (3) ஆகியோரை ஒரே மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு இலுப்பூருக்கு சென்றார். பின்னர் அவர்கள் 4 பேரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சின்ன இலுப்பூர் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 4 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர்.

அப்போது லாரியின் பின் சக்கரத்தில் குழந்தை ஜனனி, பூஞ்சோலை ஆகியோர் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த சத்தியராஜ், அவருடைய தந்தை சுந்தர்ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், பூஞ்சோலை மற்றும் அவருடைய பேத்தி ஜனனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story