இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விசை, நாட்டுப்படகு மீனவர்கள் 8 பேர் விடுதலை


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விசை, நாட்டுப்படகு மீனவர்கள் 8 பேர் விடுதலை
x
தினத்தந்தி 3 Sep 2019 10:30 PM GMT (Updated: 3 Sep 2019 8:14 PM GMT)

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கோட்டைப்பட்டினம்,

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதியை சேர்ந்தவர் தொண்டிமுத்து. இவரது மகன் தொண்டீஸ்வரன் (வயது 25). இவர் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள செம்புமகாதேவிபட்டினம் பகுதியில் தங்கி நாட்டுப்படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 20-ந்தேதி செம்புமகாதேவிபட்டினத்திலிருந்து, தொண்டீஸ்வரன் தனது நாட்டுப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். இதில் தொண்டீஸ்வரனுடன் நம்புதாளை பகுதியை சேர்ந்த தூண்டி மகன் முத்துமாரி (30), லட்சுமண் மகன் தனிக்கொடி (35), காத்தமுத்து மகன் ராமலிங்கம் (42) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்ட இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து, நாட்டுப்படகினையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கடந்த மாதம் 19-ந்தேதி கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற ஜெயகுமார் மகன் மணிகண்டன் (31), அதே ஊரை சேர்ந்த சுந்தரம் மகன் பாலகிருஷ்ணன் (47), கருப்பையா மகன் கார்த்திக் (22), முனியசாமி மகன் சதிஷ் (21) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி கைது செய்து, விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன் இனி வரும் காலங்களில் இலங்கை எல்லைக்குள் வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்து 8 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் விசை, நாட்டுப்படகுகளை பெற நவம்பர் 1-ந் தேதி படகு உரிமையாளர்கள் இந்த நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜர் ஆக வேண்டும். இல்லையென்றால் படகுகள் அரசுடமையாக்கப்படும் என்றும் கூறினார். விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்களும் அடுத்த வாரம் விமானம் மூலம் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story