பவானி அருகே காவிரி ஆற்றில் ஊராட்சிக்கோட்டை கதவணை மதகு உடைந்தது; திடீர் வெள்ளத்தால் பரபரப்பு


பவானி அருகே காவிரி ஆற்றில் ஊராட்சிக்கோட்டை கதவணை மதகு உடைந்தது; திடீர் வெள்ளத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Sep 2019 10:45 PM GMT (Updated: 4 Sep 2019 5:25 PM GMT)

பவானி அருகே காவிரி ஆற்றில் ஊராட்சிக்கோட்டை கதவணை மதகு உடைந்தது. இதனால் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானி,

பவானி அருகே ஊராட்சிக்கோட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளை கதவணை கட்டப்பட்டு உள்ளது. 18 மதகுகளை கொண்ட இந்த கதவணை 436 கன அடி கொள்ளளவு கொண்டது ஆகும்.

ஊராட்சிக்கோட்டையில் இருந்து ஈரோடு மாநகர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கதவணையில் உள்ள மதகுகளை அவ்வப்போது அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பராமரித்து வந்தனர்.

இந்தநிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் பாசனத்துக்காக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.

காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வருவதால் ஊராட்சிக்கோட்டை கதவணையில் உள்ள மதகுகளில் அழுத்தம் தாங்காமல் நேற்று அதிகாலை 4 மணி அளவில் 17-வது மதகு (ஷட்டர்) திடீரென உடைந்தது. மேலும் அந்த இரும்பு மதகு தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்டது.

மதகு உடைந்ததால் அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். மேலும், இதுபற்றிய தகவல் அறிந்ததும் கதவணை மேற்பார்வையாளர் (பொறுப்பு) சித்திக் பாத்திமா, பொறியாளர்கள் செங்குட்டுவன், சந்திரசேகர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கதவணை பராமரிப்பு பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மதகு உடைந்து இடத்தை பார்வையிட்டனர். பின்னர் மற்ற மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மேலும் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை குறைக்கும் வகையில் குதிரைக்கல் மேடு பகுதியில் உள்ள கதவணையின் மதகுகளை அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது.

இதைத்தொடர்ந்து ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டு இருந்து மதகை கதவணையில் பொருத்தும் பணிகள் நடந்தது. இந்தப் பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவை நெருங்கி வருகிறது. பாசனத்துக்காக அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஊராட்சிக்கோட்டை கதவணையின் 17-வது மதகில் அழுத்தம் தாங்காமல் மதகு உடைந்துவிட்டது. இதனை சீரமைக்கும் பணிகள் உடனடியாக நடந்து வருகிறது. விரைவில் மதகு கதவணையில் பொருத்தப்படும்’ என்றனர். ஊராட்சிக்கோட்டை கதவணையின் மதகு திடீரென உடைந்தது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story