மல்லிபட்டினம் அருகே கடலில் மூழ்கிய ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரின் கதி என்ன? குடும்பத்தினர் பரிதவிப்பு- மறியலால் பதற்றம்


மல்லிபட்டினம் அருகே கடலில் மூழ்கிய ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரின் கதி என்ன? குடும்பத்தினர் பரிதவிப்பு- மறியலால் பதற்றம்
x
தினத்தந்தி 5 Sep 2019 12:15 AM GMT (Updated: 4 Sep 2019 7:42 PM GMT)

மல்லிபட்டினம் அருகே படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிய ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களின் கதி என்ன என்பது தெரியாமல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பரிதவித்து வருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் புதுரோடு நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முனீசுவரன் (வயது 24), தரக்குடியான் (25), முனியசாமி (47), ரஞ்சித் (23), மதன்(26), இலங்கேசுவரன் (20), காந்தகுமார் (23), உமாகாந்த் (19), செந்தில்வேல் (31), காளிதாஸ் (19) ஆகிய 10 மீனவர்கள் கடந்த 29-ந்தேதி மீன் பிடி படகு வாங்குவதற்காக ரெயில் மூலம் கடலூர் சென்றனர். அங்கு ஒரு மீன்பிடி படகினை வாங்கிக்கொண்டு அதில் இந்த 10 மீனவர்களும் 3-ந்தேதி காலை புறப்பட்டு ராமேசுவரம் நோக்கி வந்துள்ளனர். இரவு தஞ்சாவூர் மல்லிபட்டினம் அருகே கடலில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகு மூழ்கியது. இதில் படகில் இருந்த 10 மீனவர்களும் கடலுக்குள் விழுந்துவிட்டனர்.

இதில் செந்தில்வேல், காளிதாஸ் ஆகிய 2 மீனவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதைக்கண்ட அப்பகுதி மீனவர்கள் அவர்களை காப்பாற்றி மல்லிபட்டினம் மீன்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் ராமேசுவரத்தில் உள்ள மற்ற மீனவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உறவினர்கள் அனைவரும் நேற்று மதியம் ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்திற்கு திரண்டு சென்று மாயமான 8 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகம் முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே தாசில்தார் அப்துல் ஜப்பார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து மண்டபம் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கமாண்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் கடலோர காவல்படை கப்பல்களும், ஹெலிகாப்டரும் அந்த பகுதிக்கு விரைந்து சென்று காணாமல் போன மீனவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் ராமேசுவரத்தில் இருந்து 2 வேன்களில் மீனவர்களின் உறவினர்கள் மல்லிபட்டினம் புறப்பட்டு சென்றுள்ளனர். தற்போது ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் மீன்பிடிக்க அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகள் கடலுக்கு செல்லாததால் துறைமுக பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில் மாயமான 8 மீனவர்களை உடனே தேடி கண்டுபிடிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மீனவர்கள் மீண்டும் மறியல் போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

Next Story