திருச்சி மத்திய பஸ் நிலையத்தில், சென்னைக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் ‘திடீர்’ சாலை மறியல்


திருச்சி மத்திய பஸ் நிலையத்தில், சென்னைக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் ‘திடீர்’ சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Sep 2019 10:45 PM GMT (Updated: 4 Sep 2019 8:07 PM GMT)

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நள்ளிரவில் சென்னைக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

கடந்த 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி அரசு விடுமுறை தினமாகும். கடந்த 31, 1-ந் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்ததால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக அமைந்தது. இதனால் வெளியூர்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். இதில் பலர் கடந்த 2-ந் தேதி இரவு அன்றே தங்கள் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

அன்றைய தினம் செல்லாதவர்களில் பலர் நேற்று முன்தினம் இரவு தங்கள் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு அலைமோதியது. குறிப்பாக சென்னை செல்வதற்கு பயணிகள் அதிக அளவில் காத்திருந்தனர். கைக்குழந்தைகளுடன் பெண்களும் பரிதவித்தபடி நின்றனர். குடும்பத்துடன் வந்தவர்கள் பஸ்சை எதிர்பார்த்து நின்றனர்.

சென்னை செல்வதற்கு போதுமான அரசு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் சிரமம் அடைந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் பயணிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். சென்னை செல்வதற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் வசதி ஏற்படுத்த கோரி மத்திய பஸ் நிலையத்திற்குள் பஸ் நுழையும் இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பஸ்கள் எதுவும் பஸ் நிலையத்திற்குள் வரமுடியவில்லை. வெளியூர்களில் இருந்து வந்த பஸ்கள் வ.உ.சி. ரோட்டில் வரிசையாக அணிவகுத்து நின்றன. பயணிகள் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமி‌‌ஷனர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டத்தை கைவிட்டு சற்று கலைந்து செல்லுமாறும், சென்னை செல்வதற்கு உடனடியாக பஸ் வசதி ஏற்படுத்தப்படும் என உதவி கமி‌‌ஷனர் கூறினார். ஆனால் பஸ்கள் வந்த பின்பு தான் கலைந்து செல்வோம் என கூறினர்.

மேலும் பயணிகள் கூறுகையில், ‘‘திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நள்ளிரவில் சென்னைக்கு அரசு பஸ்கள் போதுமான அளவு இல்லை. தனியார் ஆம்னி பஸ்கள் தான் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. அதிலும் ரூ.1,000, ரூ.1,500, ரூ.2,000 வரை விலை வைத்து டிக்கெட்டுகள் விற்பனை செய்கின்றனர். பஸ்சுக்காக காத்திருந்த எங்களிடம் வந்து தனியார் ஆம்னி பஸ் புரோக்கர்கள் டிக்கெட் விலையை கூறி ஆம்னி பஸ்சில் செல்ல கூறுகிறார்கள்’’ என்றனர்.

இதையடுத்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை போலீசார் தொடர்பு கொண்டு பஸ்கள் வர ஏற்பாடு செய்தனர். ஆனால் பஸ் உடனடியாக வராததால் பயணிகள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பணிமனையில் இருந்து அரசு பஸ்கள் வந்த பின் மறியலை கைவிட்டனர்.

அந்த பஸ்களில் ஏறி பயணிகள் சென்னைக்கு பயணம் செய்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை பரபரப்பு நிலவியது.

Next Story