மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை திருவிழா கொடியேற்றம் - திரளானவர்கள் பங்கேற்பு


மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை திருவிழா கொடியேற்றம் - திரளானவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Sep 2019 9:45 PM GMT (Updated: 4 Sep 2019 8:25 PM GMT)

மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

உடன்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் மணப்பாடு திருச்சிலுவை ஆலயமும் ஒன்றாகும். கடலோரத்தில் இயற்கையாக அமைந்த மணல் குன்றின் மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆலயத்தில் 440-ம் ஆண்டு மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலையில் பங்கு ஆலயத்தில் முதல் திருப்பலி நடந்தது. காலையில் திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீரை தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம் பெர்னாந்து, ஆலய கொடிமரத்தில் கொடியேற்றினார். விழாவில் பங்குத்தந்தைகள் சகாயம், மனோ, சகாயராயன், சில்வெஸ்டர், இன்பன்ட், விக்டர், பிரான்சிஸ், பிளேவியன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. 10-ம் நாளான வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, இரவு 7 மணிக்கு திருச்சி மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடக்கின்றது. பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு சேவியர் டெரன்ஸ் மறையுரையாற்றுகிறார்.

விழாவின் நிறைவு நாளான 14-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தமிழிலும், 5 மணிக்கு மலையாளத்திலும் திருப்பலி நடக்கிறது. காலை 6 மணிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் ஐந்து திருக்காய சபையினரின் பவனியை தொடர்ந்து திருவிழா திருப்பலி நடக்கின்றது. மாலை 4.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை ஆசீரை தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை லெரின் டிரோஸ், உதவி பங்குத்தந்தை பிரபு, ஆன்மிக தந்தை தெயோபிலஸ் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Next Story