வரதட்சணை கொடுமையால் 3-வது மனைவி சாவு, தற்கொலைக்கு தூண்டிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


வரதட்சணை கொடுமையால் 3-வது மனைவி சாவு, தற்கொலைக்கு தூண்டிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 5 Sep 2019 10:45 PM GMT (Updated: 5 Sep 2019 3:06 PM GMT)

வரதட்சணை கேட்டு கொடுமை செய்து 3-வது மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப் பளித்தது.

தேனி, 

தேனி மாவட்டம் சின்னமனூர் ஆர்.சி. பள்ளி மேற்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன் (வயது 56). கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மனைவிகள். 3-வது மனைவி சவுந்திரா (வயது 32). இவரிடம், கருப்பசாமி பாண்டியன் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்தார். இதனால், சவுந்திரா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அவருடைய தந்தை தங்கமுத்து சமாதானம் செய்து மகளை மீண்டும் மருமகன் வீட்டில் விட்டு சென்றார். இதனையடுத்து சவுந்திரா தனது தம்பி சரவணனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை தனது கணவர் கொடுமைப்படுத்துவதாகவும், கொலை செய்ய முயற்சி செய்வதாகவும் கூறினார்.

இந்தநிலையில், கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந்தேதி சவுந்திரா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை தங்கமுத்து, சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கருப்பசாமிபாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பான வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜரானார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து, நீதிபதி கீதா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், கருப்பசாமி பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story