உசிலம்பட்டி அருகே, கழுத்தை அறுத்து பெண் படுகொலை


உசிலம்பட்டி அருகே, கழுத்தை அறுத்து பெண் படுகொலை
x
தினத்தந்தி 5 Sep 2019 10:30 PM GMT (Updated: 5 Sep 2019 7:42 PM GMT)

உசிலம்பட்டி அருகே கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உசிலம்பட்டி, 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ளது, உத்தப்பநாயக்கனூர். அங்குள்ள உண்டாங்கல் பாறை மலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக உத்தப்பநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் அப்பெண்ணின் உடலை பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண், உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள திருவள்ளுவர்நகர், கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திராவிடமணி என்பவரது மனைவி உமாதேவி (வயது 45) என்பது தெரியவந்தது.

உமாதேவி எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்-யார்? என்பது குறித்தும், அவரது உடல் உசிலம்பட்டியில் இருந்து 12 கி.மீ. தூரமுள்ள மலைப்பகுதிக்கு வந்தது எப்படி? அங்கு உமாதேவியை அழைத்துச் சென்று கொலை செய்தார்களா? அல்லது வேறு எங்கும் அவரை கொலை செய்துவிட்டு பிணத்தை இப்பகுதியில் கொண்டு வந்து போட்டு சென்றார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story