பாளையங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட காதி கிராப்ட் விற்பனை நிலையம் திறப்பு - அமைச்சர் பாஸ்கர் பங்கேற்பு


பாளையங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட காதி கிராப்ட் விற்பனை நிலையம் திறப்பு - அமைச்சர் பாஸ்கர் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Sep 2019 9:45 PM GMT (Updated: 6 Sep 2019 9:00 PM GMT)

பாளையங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட காதி கிராப்ட் விற்பனை நிலையத்தை அமைச்சர் பாஸ்கர் திறந்து வைத்தார்.

நெல்லை,

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே காதி கிராப்ட் விற்பனை நிலையம் உள்ளது. அந்த விற்பனை நிலையம் புதுப்பிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு கதர் வாரிய தலைமை செயல் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கதர் கிராமம் மற்றும் தொழில் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர், சீரமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய இடங்களில் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.81 லட்சத்து 19 ஆயிரம் கதர் விற்பனையும், ரூ.1 கோடிக்கு மேல் கிராமப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு கதர் விற்பனை குறியீடாக ரூ.1 கோடியே 65 லட்சமும், கிராமப் பொருட்கள் விற்பனை ரூ.1 கோடியே 69 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களின் மழைக்கால நிவாரணமாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 1,053 குடும்பங்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் விஜிலா சத்யானந்த் எம்.பி., ஆவின் தலைவர் சுதா பரமசிவன், மண்டல துணை இயக்குனர் அருணாசலம், மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியன், உதவி கதர் அலுவலர் வடிவேல், செயலர் கற்பக விநாயகம், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ராமகிருஷ்ணன், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story