பட்டாசு ஆலைகளில் விதிமீறல்களால்தான் விபத்துகள் ஏற்படுகின்றன - தீயணைப்புத்துறை இயக்குனர் பேச்சு


பட்டாசு ஆலைகளில் விதிமீறல்களால்தான் விபத்துகள் ஏற்படுகின்றன - தீயணைப்புத்துறை இயக்குனர் பேச்சு
x
தினத்தந்தி 6 Sep 2019 10:45 PM GMT (Updated: 6 Sep 2019 9:49 PM GMT)

பட்டாசு ஆலைகளில் விதிமீறல்களால்தான் விபத்துகள் ஏற்படுகின்றன என்று சிவகாசியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தின்போது தீயணைப்புத்துறை இயக்குனர் காந்தி ராஜன் பேசினார்.

சிவகாசி,

சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான தீ விபத்துகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனர் காந்திராஜன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியாவின் மொத்த தேவையில் 75 சதவீதம் பூர்த்தி செய்வதாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் பட்டாசுகளை அனுப்பி வைக்கும் போதிலும் விபத்து ஏதாவது ஒரு இடத்தில் தான் நடக்கிறது. இது கவனக்குறைவால் ஏற்படுவதாகும். அதே போல் பட்டாசு உற்பத்தியின் போது விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடித்தால் விபத்துகளை தவிர்க்கலாம். விதிமீறல்களே விபத்துகளுக்கு காரணம் ஆகும். பட்டாசு தொழில் வளர்ச்சி பெற வேண்டும். பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை.

ஆனால் விபத்து இல்லாமல் இந்த தொழில் நடக்க பட்டாசு ஆலை உரிமையாளர்களும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். பட்டாசு உற்பத்தியின் போது விழிப்புணர்வோடு செயல்பட்டால் சிவகாசியை விபத்து இல்லாத நகரமாக்க முடியும். பட்டாசு உற்பத்தியின் போது மூலப்பொருட்களை தேவையான அளவு மட்டுமே அந்த பகுதியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதிக அளவில் மூலப்பொருட்களை ஒரே இடத்தில் வைத்தால் கூட விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. தீயணைப்புத்துறை உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் புதிய தீயணைப்பு நிலையம் விரைவில் தொடங்கப்படும். அதற்கான அனைத்து பணிகளும் நடந்து முடிந்து விட்டன. அதே போல் திருத்தங்கலில் புதிய தீயணைப்பு நிலையம் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதுவும் நிறைவேற்றித் தரப்படும். சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன், தீயணைப்புத்துறையின் மேற்கு மண்டல இணை இயக்குனர் விஜயசேகர், தென் மண்டல துணை இயக்குனர் சரவணகுமார், விருதுநகர் மாவட்ட அலுவலர் கணேசன், நெல்லை மாவட்ட அலுவலர் மகாலிங்க மூர்த்தி, விருதுநகர் மாவட்ட அலுவலர் முருகன், பட்டாசு ஆலை மற்றும் கடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் செய்திருந்தார்.

Next Story