ஆப்பக்கூடல் அருகே டாஸ்மாக் கடையில் விஷம் குடித்து விற்பனையாளர் தற்கொலை; கடன் தொல்லை காரணமா? போலீஸ் விசாரணை


ஆப்பக்கூடல் அருகே டாஸ்மாக் கடையில் விஷம் குடித்து விற்பனையாளர் தற்கொலை; கடன் தொல்லை காரணமா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 7 Sep 2019 11:00 PM GMT (Updated: 7 Sep 2019 7:48 PM GMT)

ஆப்பக்கூடல் அருகே டாஸ்மாக் கடையில் விஷம் குடித்து விற்பனையாளர் தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி,

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 40). இவர் சித்தோட்டில் ஆவின் பால் பண்ணை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி உதயா (35). இவர்களுக்கு ஹேம்நாத் (10), நந்தா (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் செந்தில், சித்தோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வேலைக்கு சென்றார். அப்போது அவருடன் மேற்பார்வையாளர் கோவிந்தனும் பணியில் ஈடுபட்டு இருந்தார். பின்னர் இரவு டாஸ்மாக் கடையை மூடிவிட்டு, அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். அப்போது செந்தில் மட்டும் வீட்டுக்கு செல்லாமல் டாஸ்மாக் கடையிலேயே தங்கிவிடுவதாக கோவிந்தனிடம் கூறினார்.

இதனால் கோவிந்தன் அங்கிருந்து சித்தோட்டில் உள்ள அவருடைய வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை கோவிந்தன் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது கடை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்தன் இதுபற்றி சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேலு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு செந்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார், செந்திலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ‘பலரிடம் செந்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் தங்களுடைய பணத்தை மீண்டும் கேட்டு உள்ளனர். ஆனால் அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக,’ தெரிய வந்தது.

எனினும் கடன் தொல்லையால் செந்தில் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட செந்திலின் உடலை பார்த்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story