தமிழகம் உள்பட நாடு முழுவதும் 75 எய்ம்ஸ் மருத்துவமனைகள் புதிதாக தொடங்கப்படும் - மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி தகவல்


தமிழகம் உள்பட நாடு முழுவதும் 75 எய்ம்ஸ் மருத்துவமனைகள் புதிதாக தொடங்கப்படும் - மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி தகவல்
x
தினத்தந்தி 7 Sep 2019 11:45 PM GMT (Updated: 7 Sep 2019 8:38 PM GMT)

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 75 எய்ம்ஸ் மருத்துவமனைகள் புதிதாக தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி கூறினார்.

கோவை,

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான இலவச புற்றுநோய் சிகிச்சை பிரிவு, அதிநவீன தொழில்நுட்ப கருவி, புற்றுநோய்க்கு எதிரான போர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவற்றின் தொடக்க விழா நடந்தது. எஸ்.என்.ஆர். அறநிலைய இணை நிர்வாக அறங்காவலர் லஷ்மி நாராயணசாமி வரவேற்றார்.

இதில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வின் குமார் சவுபே கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அவர் புற்றுநோய்க்கு எதிரான போர் என்ற விழிப்புணர்வு லோகோவை வெளியிட்டார்.

பின்னர் மத்திய மந்திரி அஸ்வின் குமார் சவுபே நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து பிரதமர் மோடி செயல் படுத்தி வருகிறார். அதில் மிக முக்கியமானது பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம். இதன் மூலம் 10 கோடி மக்களுக்கு கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடிகிறது.

இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டம் மூலம் உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன் வருகிற 2025-ம் ஆண்டுக்குள் நமது நாட்டில் இருந்து காசநோயை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் மத்திய சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.

நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் வகையில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு மக்களை கவரும் வகையில் மருத்துவ சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்குள்ள அழகுமிக்க இடங்களை பார்வையிடுவதுடன் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, இயற்கை வைத்தியம் உள்பட பல்வேறு மருத்துவ முறைகளை உள்ளடக்கி மருத்துவ சுற்றுலா வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தாண்டி யாராக இருந்தாலும் புற்றுநோய் என்ற வார்த்தையை கேட்டதும் அதிர்ச்சியடைய தான் செய்கின்றனர். பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டத்தால் ஏழை- எளிய மக்களும் புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற முடிகிறது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 75 எய்ம்ஸ் மருத்துவமனைகள் புதிதாக தொடங்கப்பட உள்ளன. அதுபோன்று தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கூடுதலாக எம்.பி.பி.எஸ். இடங்களை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

அதன்படி மதுரை மருத்துவ கல்லூரிக்கு ரூ.125 கோடியும், சேலம் மருத்துவ கல்லூரிக்கு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு ரூ.240 கோடி ஒதுக்கப்பட உள்ளன. தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 42 ஆயிரம் மருத்துவ சேர்க்கை இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிக ளில் கூடுதலாக ஒரு லட்சம் எம்.பி.பி.எஸ். இடங்களை உருவாக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளுக்குள் இந்த இலக்கை அடைய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பசு மாட்டின் கோமியம் விரைவில் மருந்து பொருளாக அறிவிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் எஸ்.என்.ஆர். அறநிலைய முதன்மை செயல் அதிகாரி வி.ராமகிருஷ்ணா, கோவை ரோட்டரி சங்கத்தை சேர்ந்த மாதவ் சந்திரன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் பி.குகன், ஜி.இ.ஹெல்த்கேர் நிறுவன தெற்காசிய விற்பனை பிரிவு தலைவர் ராகவேந்திரன் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் நன்றி கூறினார்.

Next Story