பெண் உள்பட 5 பேருக்கு தலா 8 ஆண்டு சிறை தண்டனை - திருச்சி கோர்ட்டு தீர்ப்பு


பெண் உள்பட 5 பேருக்கு தலா 8 ஆண்டு சிறை தண்டனை - திருச்சி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 7 Sep 2019 8:53 PM GMT (Updated: 7 Sep 2019 8:53 PM GMT)

தொழிலாளி கொலை வழக்கில், பெண் உள்பட 5 பேருக்கு தலா 8 ஆண்டு சிறை தண்டனை - திருச்சி கோர்ட்டு தீர்ப்பு

திருச்சி,

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது 32). தொழிலாளியான இவருக்கும், திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரத்தை சேர்ந்த சதீஷ்குமாருக்கும்(29) முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரவியை பிடித்து தள்ளியதில் அருகே நின்ற வாகனம் ஒன்றின் மீது விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரவியின் மனைவி கஸ்தூரி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இதற்கு காரணமான சதீஷ்குமார், அவரது மனைவி தாரா(26), உறவினர்களான சொக்கன்(65), நாமக்கல்லை சேர்ந்த முருகேசன்(39), ஈரோட்டை சேர்ந்த சந்திர சேகர்(37) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி செல்வம் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், “குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு தலா 8 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.2,750 அப ராதமும்” விதித்து இருந்தார்.

Next Story