கர்நாடக வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் ; முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை


கர்நாடக வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் ; முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை
x
தினத்தந்தி 8 Sep 2019 12:02 AM GMT (Updated: 8 Sep 2019 12:02 AM GMT)

கர்நாடக வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.

மைசூரு, 

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. மழை-வெள்ளத்தால் 22 மாவட்டங்களில் 103 தாலுகாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 82 பேர் பலியானார்கள். வெள்ளத்தால் 7.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த விளைபயிர்களும் நாசமாகின. வீடுகளை இழந்த மக்கள் தங்கியிருக்க 493 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. இதில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.

மழை-வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையே சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கும் நிகழ்வை காண பிரதமர் மோடி நேற்று முன்தினம் பெங்களூரு வந்தார். அவரை எலகங்கா விமானப்படை தளத்தில் வைத்து முதல்-மந்திரி எடியூரப்பா சந்தித்து பேசினார்.

அப்போது கர்நாடக வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் நேற்று மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணை நிரம்பியதை தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா அங்கு சிறப்பு வழிபாடு நடத்தி சமர்ப் பண பூஜையை நிறை வேற்றினார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

பெங்களூரு வந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது கர்நாடகத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிதியை உடனடியாக விடுவிக்கும்படி கோரிக்கை வைத்தேன். கர்நாடக மழை-வெள்ள சேதம் பற்றி பிரதமர் மோடி அதிகமாக அறிந்துவைத்துள்ளார். அவர் வெள்ள நிவாரண நிதி ஒதுக்குவது பற்றி சாதகமான பதிலை கூறியுள்ளார். எனவே மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கர்நாடக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற வளர்ச்சிப் பணிகளை நிறுத்திவைத்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மழை-வெள்ளத்தால் கர்நாடகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வீடுகளை இழந்த 1.25 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக மத்திய அரசின் நிவாரண நிதியை எதிர்பார்த்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story