மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 8 Sep 2019 11:15 PM GMT (Updated: 8 Sep 2019 6:27 PM GMT)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக் கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

கோபியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் நடந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:-

பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டவல்லுனர்கள் ஆலோசனையுடன் புதிய சட்டம் கொண்டுவர ஆவன செய்யப்படும். மாணவிகள் மீது பாலியல் தொல்லை நடப்பது வேதனைக்குரியதாக உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களால், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

தற்காலிக ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பின்லாந்து நாடு கல்வியில் மேன்மை அடைந்துள்ளது. எல்.கே.ஜி., யு.கே.ஜி.லேயே மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், பழக்க வழக்கம், பண்பாடு ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்த புதிய முறைகளை தமிழகத்திலும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு நிதி தேவை. எனவே இதுதொடர்பாக முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பறைகளில் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சி.சி.டி.வி. கேமரா அமைக்க நிதி தேவைப்படுவதால் இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் பரிசீலனை செய்யப்படும். 90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புக்கு, அங்கன்வாடி பணியாளர்களை ஆசிரியர்களாக பயிற்சி அளித்து பணியில் அமர்த்த வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து உள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்யப்படும். ஆசிரியர்கள் தேர்வு முறைகள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. புதிய பாடத்திட்டங்களை ஆசிரியர்கள் முழுமையாக படித்தால்தான் தேர்வில் வெற்றி பெற முடியும்.

இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பேட்டியின் போது அவருடன் நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியன், கோபி கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன் மற்றும் கட்சியினர் பலர் இருந்தனர்.

Next Story