குடும்ப பிரச்சினையில் விபரீதம்: விஷ மாத்திரைகளை தின்று தம்பதி தற்கொலை


குடும்ப பிரச்சினையில் விபரீதம்: விஷ மாத்திரைகளை தின்று தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 8 Sep 2019 10:45 PM GMT (Updated: 8 Sep 2019 8:18 PM GMT)

பழனி அருகே, குடும்ப பிரச்சினையால் விஷ மாத்திரைகளை தின்று தம்பதி தற்கொலை செய்தனர்.

பழனி, 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடி 5-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45). விவசாயி. இவரது மனைவி வனிதா (35). இவர்களுக்கு களஞ்சியம் (17) என்ற மகனும், ஐஸ்வர்யா (16) என்ற மகளும் உள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் முறையே பிளஸ்-2, பிளஸ்-1 படித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக முருகானந்தம்-வனிதா தம்பதி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் வனிதா, தனது கணவனிடம் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து உறவினர்கள் சமாதானம் செய்து, அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனமுடைந்த முருகானந்தம் வீட்டில் இருந்த விஷ மாத்திரைகளை எடுத்து தின்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வனிதாவும் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார். வனிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி வனிதாவும் இறந்தார்.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸ் நிலையத்தில் முருகானந்தத்தின் தந்தை ஞானவேல் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story