வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து குழந்தை உள்பட 22 பேர் படுகாயம்


வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து குழந்தை உள்பட 22 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Sep 2019 10:00 PM GMT (Updated: 8 Sep 2019 8:29 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து குழந்தை உள்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

கூத்தாநல்லூர், 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் இருந்து மாவூர் வழியாக திருவாரூரை நோக்கி நேற்று காலை தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை அன்னுக்குடியைச்சேர்ந்த பகத்சிங் (வயது 28) என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது திருநாட்டியத்தான்குடி என்ற இடத்தில் முன்னால் நின்றுகொண்டிருந்த லாரியை கடந்து செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் பஸ் கவிழ்ந்தது. அப்போது பஸ்சில் பயணம் செய்தவர்கள் அலறினர்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து பஸ்சில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் குழந்தை உள்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story