கூடலூர் பகுதியில் அட்டகாசம் செய்யும், காட்டு யானைகளை விரட்ட விவசாயிகள் புதிய யுக்தி


கூடலூர் பகுதியில் அட்டகாசம் செய்யும், காட்டு யானைகளை விரட்ட விவசாயிகள் புதிய யுக்தி
x
தினத்தந்தி 9 Sep 2019 11:00 PM GMT (Updated: 9 Sep 2019 5:20 PM GMT)

கூடலூர் பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட வேலியில் மண்எண்ணெய் விளக்கு கட்டும் புதுயுக்தியை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.

கூடலூர்,

கூடலூர் மற்றும் முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது. குறிப்பாக கூடலூர் கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், மேல்கூடலூர், கோக்கால் மலையடிவாரம் மற்றும் தொரப்பள்ளி, குனில், ஏச்சம்வயல், மண்வயல், வடவயல் உள்பட பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுந்து விடுகின்றன. இவ்வாறு புகும் காட்டுயானைகள் அங்குள்ள வாழைகள், தென்னை மரங்கள், பாக்கு மரங்கள், நெல் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர், ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எவ்வித பலனும் ஏற்பட வில்லை. வன விலங்குகளின் அட்டகாசத்தால் விவசாய பயிர்கள் நாசமாகின்றன. இதன்காரணமாக விவசாயிகளுக்கு ந‌‌ஷ்டம் ஏற்படுகிறது. எனவே கூடலூர் தொரப்பள்ளி, புத்தூர்வயல், ஏச்சம்வயல், மண்வயல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளை காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாக்க அப்பகுதி மக்கள் மின்வேலிகளை அமைக்கின்றனர்.

இங்குள்ள பொதுமக்கள் சில இடங்களில் கண்ணாடி பாட்டில்களை விவசாய நிலத்தை சுற்றி கட்டப்பட்டு உள்ள இரும்பு கம்பிகளில் தொங்க விட்டுள்ளனர். காட்டு யானைகள் விவசாய பயிர்களை தேடி ஊருக்குள் வரும் சமயத்தில் இரும்பு கம்பிகளை காட்டு யானைகள் தொடும்போது கண்ணாடி பாட்டில்கள் ஒன்றுடன் ஒன்றாக உரசி சத்தம் எழுப்புகிறது. இந்த சத்தம் கேட்டு பொதுமக்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டியடிக்க தயாராகின்றனர்.

இது தவிர பல இடங்களில் வேலிகளில் மண்எண்ணெய் விளக்குகளை இரவில் விவசாயிகள், பொதுமக்கள் கட்டி தொங்கி விடுகின்றனர். மண்எண்ணெய் விளக்குகளில் இருந்து எரியும் தீயை கண்டதும் காட்டு யானைகள் வராமல் இருக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது போன்ற புதிய யுக்திகளை விவசாயிகள் கையாண்டு காட்டு யானைகளை விரட்டி வருகின்றனர் ஆனால் மழைப்பெய்யும் போது மண்எண்ணெய் விளக்குகள் அணைந்து விடுகின்றன. இதனால் காட்டு யானைகள் எவ்வித தடையும் இன்றி விவசாய நிலத்திற்குள் புகுந்து விடுகின்றன.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, மழை இல்லாத சமயத்தில் மாலை அல்லது இரவில் மின்வேலியில் கட்டி தொங்க விடப்பட்டு உள்ளன. இந்த மண்எண்ணை பாட்டிலில் தீ பற்ற வைத்து விடுவது வழக்கம். சில மணி நேரம் தொடர்ந்து விளக்கு எரிவதால் காட்டு யானைகள் வராது. ஆனால் மழைக்காலத்தில் விளக்குகள் எரிவது இல்லை என்று அவர்கள் கூறினர்.

Next Story