சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள்-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள்-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Sep 2019 10:45 PM GMT (Updated: 9 Sep 2019 6:47 PM GMT)

சீராக குடிநீர் வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிலுவம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

நாமக்கல் ஒன்றியம் சிலுவம்பட்டி ஊராட்சியில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீரை ஏற்றம் செய்து, காவிரி குடிநீரையும் கலந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். ஆனால் போதுமான மழை இல்லாத காரணத்தினால் 5 ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன.

எனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலையில் உள்ளோம். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி மற்றும் அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்தனர். அப்போது உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு பெண்கள் திரண்டு வந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல மோகனூர் ஒன்றியம் என்.புதுப்பட்டி ஊராட்சி மேலப்பட்டி பகுதியிலும் போதுமான குடிநீர் வசதி இல்லாததால் சுமார் 2 கி.மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Next Story