திருவள்ளூர் - நலத்திட்ட உதவிகள்


திருவள்ளூர் - நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 10 Sep 2019 10:30 PM GMT (Updated: 10 Sep 2019 5:25 PM GMT)

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனைபட்டா, ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, வேலைவாய்ப்பு, கடனுதவி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 397 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்திற்கான காசோலைகளையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 8 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தலா ரூ.3 ஆயிரத்து 296 மதிப்பில் மொத்தம் 26 ஆயிரத்து 368 மதிப்பிலான நடைபயிற்சி உபகரணங்கள் என மொத்தம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்து 368 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் அருணா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் திரளான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story