தஞ்சையில் இருந்து கொண்டு வரப்பட்ட மான்கள் கோடியக்கரை சரணாலயத்தில் விடப்பட்டன


தஞ்சையில் இருந்து கொண்டு வரப்பட்ட மான்கள் கோடியக்கரை சரணாலயத்தில் விடப்பட்டன
x
தினத்தந்தி 10 Sep 2019 10:15 PM GMT (Updated: 10 Sep 2019 5:50 PM GMT)

தஞ்சையில் இருந்து கொண்டு வரப்பட்ட மான்கள் கோடியக்கரை சரணாலயத்தில் விடப்பட்டன.

வேதாரண்யம்,

தஞ்சை சிவகங்கை பூங்கா, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக மான்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரங்களில் விலங்குகள் பராமரிக்க கூடாது என சட்டம் உள்ளதால் பூங்காவில் உள்ள மான்கள் மற்றும் நரி, சீமை எலி, புறா ஆகியவற்றை இடமாற்றம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பூங்காவில் உள்ள 41 மான்களையும் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை சரணாலயத்துக்கு கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து சிவகங்கை பூங்காவில் இருந்து மான்கள் நேற்று முன்தினம் கோடியக்கரைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல் கட்டமாக 28 பெண் மான்கள் கொண்டு வரப்பட்டன. பின்னர் கோடியக்கரை சரணாலயத்தில் உள்ள யானைபள்ளம் பகுதியில் நேற்று, மான்கள் விடப்பட்டன.இந்த மான்களை வன துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த மான்களின் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு சிவகங்கை பூங்காவில் உள்ள மீதமுள்ள மான்களும் கொண்டு வந்து சரணாலயத்தில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story