முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் மகளுக்கு சம்மன் நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவு


முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் மகளுக்கு சம்மன் நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவு
x
தினத்தந்தி 10 Sep 2019 11:00 PM GMT (Updated: 10 Sep 2019 7:05 PM GMT)

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் மகளுக்கு 12-ந் தேதி (அதாவது நாளை) நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிஉத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு, 

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் மகளுக்கு 12-ந் தேதி (அதாவது நாளை) நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிஉத்தரவிட்டு உள்ளது.

வருமான வரி சோதனை

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றியவருமான டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் டெல்லியில் அவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து ரூ.8.59 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது.

இதுகுறித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறையை வருமான வரித்துறை கேட்டுக் கொண்டது. அதன்படி அமலாக்கத்துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை ரத்து செய்ய கோரிய டி.கே.சிவக்குமாரின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.

அமலாக்கத்துறை விசாரணை

இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜரானார். 4 நாட்கள் விசாரணை நடத்திய பிறகு கடந்த 3-ந் தேதி அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவர் தற்போது வருகிற 13-ந் தேதி வரை போலீஸ் காவலில் உள்ளார். அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அன்றைய தினம் (13-ந் தேதி) அவர் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். மேலும் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு அமலாக்கத்துறையினர் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம், டி.கே.சிவக்குமார் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதும் விசாரணை நடைபெற உள்ளது.

ரூ.20 கோடி பரிவர்த்தனை

இந்த நிலையில் டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமானவர்களை அழைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை 12-ந் தேதி (அதாவது நாளை) நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. ஐஸ்வர்யாவின் வங்கி கணக்கில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ.20 கோடி ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தவே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதால், டி.கே.சிவக்குமாருக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Next Story