பனை மர சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் - பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அறிவுரை


பனை மர சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் - பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அறிவுரை
x
தினத்தந்தி 10 Sep 2019 9:30 PM GMT (Updated: 10 Sep 2019 7:09 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பனை மர சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா அறிவுறுத்தியுள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர், 

வேளாண் உற்பத்தியினை உயர்த்துவதற்கும், விவசாய பெருமக்களின் வருமானத்தை உயர்த்தி, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பனைமரம் தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது. பனை மரத்தில், வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பத்தை மட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளை, பனங்காய், பச்சை மட்டை, சாரை ஓலை, குருத்தோலை என அனைத்து பாகங்களுமே பயன் தரக்கூடியது. இந்த காரணங்களாலேயே பனைக்கு ‘கற்பக விருட்சம்‘ என்று நம் முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். இம்மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் ஆரோக்கியமான பானம் ஆகும். நுங்கும், பனங்கிழங்கும் உணவாகப் பயன்படுகின்றன. இவற்றின் ஓலை, கூடைகள் தயாரிக்கவும் கைவினைப் பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகிறது. தண்டுப்பகுதி வீடு கட்ட பயன்படுகிறது. பனஞ்சாறு கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் தயாரிக்கப்பட்டு தமிழர் உணவு பழக்கத்தில் ஆரோக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது.

பனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்நாட்டில் பனை மரங்களின் சாகுபடியினை உயர்த்தி, பனை மரங்களை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கத்தில், தமிழக முதல்- அமைச்சர் சட்டஎண் 110-ன் கீழ் நிலத்தடி நீரை பாதுகாக்கும் பனை மரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரை பகுதிகளில் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு, முதற்கட்டமாக நடப்பாண்டில் ரூ.10 கோடி செலவில் 2 கோடியே 50 ஆயிரம் அளவிலான பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இப்பணி வருங்காலங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அறிவித்துள்ளார்.

அதன்படி, நடப்பு ஆண்டில் 2 கோடி பனைமர விதைகளை மானாவாரி விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் செய்வதற்காக, மாநில அரசு ரூ.8 கோடி நிதி வழங்கி அரசு ஆணை வெளியிட்டு, பனை மர விதைகள் கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு எக்டர் மானாவாரி நிலத்திற்கு 50 பனை மர விதைகள் வீதம், வினியோகிக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் பனைமர விதைகள் வினியோகத்திற்காக ரூ.30 லட்சம் நிதியினை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இதேபோன்று மானாவாரி நிலங்களை பசுமைப்போர்வை போன்று மாற்றும் வகையில், நடப்பாண்டில் எக்டருக்கு ரூ.100 மதிப்புள்ள வாகை, தேக்கு, புளி, வேம்பு, இலுப்பை, மகாகனி, ஈட்டி போன்ற பலன்தரும் மரங்களின் கன்றுகளும் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 75 ஆயிரம் பலன்தரும் மரங்களின் கன்றுகள் வினியோகத்திற்காக ரூ.15 லட்சம் நிதியினை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகள் பனை மற்றும் இதர பயன்தரும் மரக்கன்றுகளை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story