தர்மபுரி கடைகளில் திடீர் சோதனை: 1,250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; திருமண மண்டப நிர்வாகிக்கு அபராதம்


தர்மபுரி கடைகளில் திடீர் சோதனை: 1,250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; திருமண மண்டப நிர்வாகிக்கு அபராதம்
x
தினத்தந்தி 10 Sep 2019 11:15 PM GMT (Updated: 10 Sep 2019 7:58 PM GMT)

தர்மபுரியில் நகராட்சி அதிகாரிகள் கடைகளில் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட 1,250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குப்பைகளை தெருவில் கொட்டிய திருமண மண்டப நிர்வாகிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி நகரில் பல்வேறு இடங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், பல கடைகளில் பொருட்களை வழங்க தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்படுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்தநிலையில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் சுகாதார பிரிவு அதிகாரிகள் நேற்று பஸ்நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின்போது 21 கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பிளா ஸ்டிக் பொருட்கள் 1250 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் குழுவினர் தர்மபுரி நகரில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்களில் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாரதிபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமணமண்டபத்தில் சேர்ந்த குப்பைகள் தெருவில் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த திருமண மண்டப நிர்வாகிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திடக்கழிவு மேலாண்மை விதிகளை மதிக்காமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் குப்பைகள், உணவு கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் திருமணமண்டபங்கள், வணிகநிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்தார்.

Next Story