சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சியில் ஓதி குப்பம் ஏரி தூர்வாரும் பணி ; கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்


சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சியில் ஓதி குப்பம் ஏரி தூர்வாரும் பணி ; கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 10 Sep 2019 11:15 PM GMT (Updated: 10 Sep 2019 7:58 PM GMT)

சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சியில் ஓதி குப்பம் ஏரி தூர்வாரும் பணியை கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.

பர்கூர்,

பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சியில் 65 ஏக்கர் பரப்பளவில் ஓதிகுப்பம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை ரூ.5 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை கலெக்டர் பிரபாகர், சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பர்கூர் தாசில்தார் கோபிநாத், ஒன்றிய பொறியாளர் கோவிந்தராஜ், மற்றும் விஸ்வநாதன், சிவா, முத்துராமன் உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது கலெக்டர் பேசியதாவது:-

65 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஓதிகுப்பம் ஏரியை ரூ.5 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஏரி 10 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை நில அளவைத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் பர்கூர் ஒன்றியத்தில் மட்டும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 165 ஏரிகள், 36 குளங்கள் உள்ளன.

இவற்றில் கன்னிசெட்டி ஏரி, கோவிந்தநாயக்கன் ஏரி, அழகியபுதூர் ஏரி, கப்பல்வாடி ஏரி, ராயல் ஏரி, பில்லனகுப்பம் ஏரி, லட்சுமிநாயக்கன் ஏரி, சந்தூர் ஏரி, வெப்பாலம்பட்டி ஏரி, குரும்பன்குட்டை ஏரி, லட்சுமிகவுண்டன் ஏரி, ஆதிதிராவிடர் குட்டை ஆகிய ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதேபோல் தாய் திட்டத்தின்கீழ் ஏற்கனவே 8 ஏரிகள் தூர் வாரப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் சார்பில் 3 ஏரிகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஏரி மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story