நெல்லையில் ஏ.ஐ.டி.யு.சி. சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை


நெல்லையில் ஏ.ஐ.டி.யு.சி. சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Sep 2019 10:00 PM GMT (Updated: 10 Sep 2019 8:36 PM GMT)

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை சந்திப்பில் ஏ.ஐ.டி.யு.சி. சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை, 

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை சந்திப்பில் ஏ.ஐ.டி.யு.சி. சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. சுமைதூக்கும் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் துர்க்கை முத்து தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெடிகண்டபெருமாள், வெள்ளச்சாமி,துரைப்பாண்டியன், உலகநாதன், ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. துணைத்தலைவர்கள் ரெங்கன், சடையப்பன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தனி நலவாரியம்

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்கவேண்டும். சுமக்கும் எடையின் அளவு 55 கிலோவுக்குள் இருக்கவேண்டும். பணியிடத்தில் இறப்பவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவேண்டும். 55 வயது நிறைவு பெற்றவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்கவேண்டும். அனைத்து தொழிலாளர்களையும், வருங்கால வைப்பு நிதி திட்டத்திலும், இ.எஸ்.ஐ. திட்டத்திலும் சேர்க்கவேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கட்டிட சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், அமைப்புச்சாரா தொழிலாளர் சங்க பொருளாளர் இசக்கி, பீடி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story