சூலூர் அருகே பரபரப்பு 3-வது திருமணத்துக்கு முயன்ற கணவரை சரமாரியாக தாக்கிய முதல் 2 மனைவிகள்


சூலூர் அருகே பரபரப்பு 3-வது திருமணத்துக்கு முயன்ற கணவரை சரமாரியாக தாக்கிய முதல் 2 மனைவிகள்
x
தினத்தந்தி 10 Sep 2019 11:30 PM GMT (Updated: 10 Sep 2019 8:59 PM GMT)

சூலூர் அருகே 3-வது திருமணத்திற்கு முயன்ற கணவரை முதல் 2 மனைவிகள் சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சூலூர், 

சூலூர் அருகே 3-வது திருமணத்திற்கு முயன்ற கணவரை முதல் 2 மனைவிகள் சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர் மீது தாக்குதல்

கோவையை அடுத்த சூலூர் அருகே அரசூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு வாலிபரை 2 பெண்கள் உள்பட சிலர் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர். இதனால் அங்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் விரைந்து வந்து தாக்குதலுக்கு ஆளான வாலிபரை மீட்டனர். மேலும் அவரை தாக்கிய 2 பெண்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், வாலிபரை தாக்கிய பெண்கள் 2 பேரும் அவருடைய மனைவிகள் மற்றும் உறவினர்கள் என்பது தெரியவந்தது.

பாலியல் துன்புறுத்தல்

மேலும் அந்த வாலிபர், சூலூர் நேரு நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அரங்க அரவிந்த் தினேஷ் (வயது 30) என்பதும், அவர், தனது முதல் 2 மனைவிகளுக்கும் தெரியாமல் 3-வதாக ஒரு திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரம் அடைந்து சரமாரியாக தாக்கியதும் தெரிய வந்தது.

இது குறித்து அரங்க அரவிந்த் தினேஷின் முதல் மனைவி பிரியதர்ஷினி கூறியதாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு எனக்கும் அரங்க அரவிந்த் தினேசுக்கும் திருமணம் நடை பெற்றது. ஆனால் திருமணம் ஆன ஒரு சில மாதங்களிலேயே எனது கணவரும், அவரது வீட்டில் உள்ளவர்களும் என்னை கொடுமைப்படுத்தினர். எனது கணவரும், அவருடைய தந்தையும் சேர்ந்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.

2-வது திருமணம்

மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி அடித்து உதைத்தனர். இதனால் எனது வயிற்றில் இருந்த கரு கலைந்து விட்டது. இதனால் நான் அவரை விட்டு பிரிந்து திருப்பூரில் உள்ள எனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன்.

இதனிடையே எனக்கு தெரியாமல் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்த அனுப்பிரியா என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து எனக்கு சில நாட்களுக்கு முன்புதான் தகவல் தெரிந்தது.

கொடுமை அனுபவித்தார்

2-வதாக திருமணம் செய்த பெண்ணிடம், முதலில் திருமணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். நான் அந்த பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, அவரும் எனது கணவரிடம் மிகுந்த கொடுமைகளை அனுபவிப்பது தெரியவந்தது.இதனிடையே எனது கணவர் 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்து வந்தார். அதற்காக அவர் பெண் தேடி வந்தார். இதை தெரிந்து கொண்ட நான், அனுப்பிரியா மற்றும் எங்களது உறவினர்களுடன், எனது கணவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று கேட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அலைக்கழிப்பு

இது குறித்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கரன் கூறும்போது, இருதரப்பினரும் புகார் கொடுத்து உள்ளனர். இருவரது திருமணமும் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. எனவே திருப்பூர் அல்லது போத்தனூர் மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய ஏதாவது ஒன்றில் புகார் அளிக்கும்படி இருதரப்பினரையும் அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

இது குறித்து பிரியதர்ஷினி மற்றும் அவரது உறவினர்கள் கூறுகையில், ஏற்கனவே திருப்பூர் மற்றும் போத்தனூரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து பல மாதங்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். எனவே கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.

Next Story