ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு: தனியார் எண்ணெய் ஆலையில் அமைச்சர் கந்தசாமி திடீர் ஆய்வு - நடவடிக்கை எடுக்க உத்தரவு


ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு:  தனியார் எண்ணெய் ஆலையில் அமைச்சர் கந்தசாமி திடீர் ஆய்வு - நடவடிக்கை எடுக்க உத்தரவு
x
தினத்தந்தி 10 Sep 2019 11:09 PM GMT (Updated: 10 Sep 2019 11:09 PM GMT)

ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தனியார் எண்ணெய் ஆலையில் அமைச்சர் கந்தசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே துத்திப்பட்டில் முந்திரி கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிக்கும் தனியார் ஆலை உள்ளது. இங்கு ஆழ்துளை குழாய் மூலம் அதிகளவு தண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும், ரசாயன கழிவுகளால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தரப்பில் மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் மாசுகட்டுப்பாட்டு துறையை கவனித்துவரும் அமைச்சர் கந்தசாமி, தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. தொழிலாளர் நலத்துறை ஆணையர் வல்லவன் ஆகியோர் நேற்று காலை சம்பந்தப்பட்ட தனியார் எண்ணெய் ஆலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். முந்திரி எண்ணெய் தயாரிப்பது, ஆலையை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது ஆலை வளாகத்தில் அனுமதியின்றி இரண்டு ஆழ்துளை குழாய்கள் அமைத்திருப்பதும், சட்டத்துக்கு புறம்பாக ரசாயன பொருட்கள் தயாரிப்பதும், இதன் கழிவுகளை ஆழ்துளை குழாய்கள் மூலம் பூமியில் கலக்கச் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டார்.

Next Story