பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிள்களில் தப்பியவர்களுக்கு வலைவீச்சு


பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிள்களில் தப்பியவர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Sep 2019 11:35 PM GMT (Updated: 10 Sep 2019 11:35 PM GMT)

புதுவையில் வெவ்வேறு இடங்களில் பெண்களிடம் 7 பவுன் தங்கச் சங்கிலிகள் பறித்துச் செல்லப்பட்டன. தங்கச்சங்கிலிகளை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் லோகேஷ். வெளிநாட்டில் கப்பலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரசன்னாதேவி (வயது 34). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உறவினருடன் ஸ்கூட்டரில் சென்றார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஸ்கூட்டரை பிரசன்னா தேவி ஓட்டினார். அவரது உறவினர் பின்னால் அமர்ந்திருந்தார்.

வைத்திக்குப்பத்தை அடுத்த செங்கேணியம்மன் கோவில்-பாப்பம்மாள் கோவில் சந்திப்பில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தார். இதில் நிலைதடுமாறிய அவர் வண்டியை நிறுத்தி விட்டு செயினை பறிக்கவிடாமல் போராடினார். அப்போது தாலியில் அணிந்திருந்த பொட்டுகள் கழற்று விழுந்தது. அந்த மர்ம நபர் 5 பவுன் தாலி செயினை மட்டும் பறித்துக்கொண்டார். அதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். இரவு நேரம் என்பதால் அருகில் உள்ளவர்கள் வர காலதாமதம் ஏற்பட்டது. அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிவிட்டார்.

இது குறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுவை மேட்டுப்பாளையத்தை அடுத்த முத்திரையர்பாளையம் அமைதி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 42). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வசந்தி (50). தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில் செல்வி, சாந்தி ஆகியோர் நாள்தோறும் மாலையில் அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி அவர்கள் 2 பேரும் நேற்றுமாலை அமைதி நகர் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் செல்வி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியும், வசந்தியின் செல்போனையும் பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதேபோல் மற்றொருவரிடமும் பணத்தை பறிக்க அந்த மர்ம நபர்கள் முயற்சித்தனர். அப்போது பொதுமக்கள் திரண்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். நகையை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story