அந்தியூர் அருகே மக்காச்சோள தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது


அந்தியூர் அருகே மக்காச்சோள தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 11 Sep 2019 10:30 PM GMT (Updated: 11 Sep 2019 5:29 PM GMT)

அந்தியூர் அருகே மக்காச்சோள தோட்டத்தில் மலைப்பாம்பை வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் பிடித்தனர்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள நகலூரை சேர்ந்தவர் பூங்கொடி. இவருக்கு நகலூர் காப்புக்காடு பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். இந்தநிலையில் பூங்கொடி நேற்று பகல் 11 மணி அளவில் தொழிலாளர்கள் 4 பேருடன் மக்காச்சோளம் அறுவடை செய்துகொண்டு இருந்தார். அப்போது ஒரு இடத்தில் செடிகள் அசைந்து கொண்டே இருந்தன. இதனால் 5 பேரும் செடி அருகே சென்று பார்த்தார்கள். அப்போது அங்கு மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டு இருந்தது தெரியவந்தது.

மலைப்பாம்பை பார்த்த 5 பேரும் பயந்துபோய் தோட்டத்தை விட்டு வெளியே ஓடிவந்தார்கள். பின்னர் இதுகுறித்து அந்தியூர் வனத்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் ரேஞ்சர் உத்திரசாமி தலைமையில் வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தார்கள்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் பெரிய இடுக்கியை பயன்படுத்தி மலைப்பாம்பை லாவகமாக பிடித்து ஒரு சாக்கு பையில் போட்டார்கள். அப்போது அவர்கள், ‘பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் இருக்கும். அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வந்திருக்கலாம்‘ என்றார்கள்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பாம்பை அடர்ந்த வனப்பகுதியான வரக்கோம்பையில் கொண்டு சென்று விட்டார்கள்.

Next Story