வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு


வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 11 Sep 2019 11:30 PM GMT (Updated: 11 Sep 2019 6:48 PM GMT)

வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் ஏரிகள், குளங்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்

வேப்பனப்பள்ளி,

வேப்பனப்பள்ளி ஒன்றியம் பில்லனகுப்பம் ஊராட்சியில் உள்ள தளவாய்பள்ளி ஏரி ரூ.5 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.83 லட்சம் மதிப்பில் நீர் வெளியேறும் பகுதியில் தடுப்பு சுவர் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும் குருபரப்பள்ளி ஊராட்சி காட்டேரி குட்டை ரூ.1 லட்சம் மதிப்பிலும், பி.கே.பெத்தனப்பள்ளி ஊராட்சி கங்கசந்திரம் கிராமத்தில் லட்சுமண் குட்டை ரூ.1 லட்சம் மதிப்பிலும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளையும் கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 11 ஏரிகளும், 31 குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் வி.மாதேப்பள்ளி ஊராட்சியில் அத்திகுண்டா ஏரி, பில்லனகுப்பம் ஊராட்சியில் தளவாய்பள்ளி ஏரி, நீலாம்பரை ஏரி, வேப்பனப்பள்ளி ஊராட்சியில் தளி கோட்டூர் ஏரி, சின்னமணவாரனப்பள்ளி ஏரி, நாச்சிகுப்பம் ஊராட்சியில் பன்டேரி, அலேகுந்தானி ஊராட்சியில் அளேகிருஷ்ணாபுரம் ஏரி, சிந்தகும்மனப்பள்ளி ஊராட்சியில் எட்ரப்பள்ளி ஏரி, பதிமடுகு ஊராட்சியில் நாய்கன் ஏரி, குப்பச்சிபாறை ஊராட்சியில் பெல்லேகவுண்டன் ஏரி, கோடிப்பள்ளி ஊராட்சியில் கெட்டேரி என 11 ஏரிகளில் குடிமராத்து திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல 31 குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தன்னார்வலர்கள் மூலம் 6 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் நாச்சிகுப்பம் ஊராட்சியில் ஒரு ஏரியும், வேப்பனப்பள்ளி ஊராட்சியில் சீரம்மா ஏரி, எண்ணேகொள்ளு ஊராட்சியில் ஜெட்ஏரி, மாரசந்திரம் ஊராட்சியில் கோரல்நத்தம் ஏரி, குந்தாரப்பள்ளியில் பன்னேரி, பில்லனகுப்பம் ஊராட்சியில் சின்னகவுண்டன் ஏரி ஆகிய ஏரிகள் தன்னார்வலர்கள் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூர் வாரும் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாகவே முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், ஞானபிரகாசம், ஒன்றிய பொறியாளர் வாசுகி, பணி மேற்பார்வையாளர் திருவேங்கடம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story