நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் ; கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா பங்கேற்பு


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் ; கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா பங்கேற்பு
x
தினத்தந்தி 11 Sep 2019 11:15 PM GMT (Updated: 11 Sep 2019 6:49 PM GMT)

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா கலந்து கொண்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளருமான தயானந்த் கட்டாரியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகள், நீர் செறிவூட்டும் பணிகள், பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், குடிமைப்பொருட்கள் வழங்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முதன்மை கல்வி அலுவலர் உஷா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் வடகரையாத்தூர் கிராமத்தில் வடகரையாத்தூர் ஏரியில் ஊராட்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, பணிகள் குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்தார்.

அப்போது கலெக்டர் வடகரையாத்தூர் ஏரியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 100 மீட்டர் அகலம்்்்் மற்றும் 150 மீட்டர் நீளத்தில் சிறுகுளம் அமைக்கும் பணிகளும், வடகரையாத்தூர் ஏரியின் கரையினை 462 மீட்டர் நீளத்திற்கு 2.5 மீட்டர் உயரத்திற்கு பலப்படுத்தும் பணிகளும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளபடுவதாக கூறினார்.

தொடர்ந்து கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கு.அய்யம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிடுவதை நேரில் பார்வையிட்டு, உணவு தரமாக உள்ளதா? ருசியாக உள்ளதா? என்று மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் அய்யம்பாளையம் கிராமத்தில் ராஜவாய்க்காலில் அய்யம்பாளையம் தலைப்பு மதகின் மேல்புறம் மற்றும் கீழ்புறம் கான்கிரீட் சுவர் அமைத்து பலப்படுத்தப்பட்டு உள்ளதை பாசனதாரர் சங்கத்தினருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நீர் வெளிப்போக்கி முன்புறமாக விவசாயிகள் இடுபொருட்களை தங்கள் விவசாய நிலத்திற்கு கொண்டு செல்லவும், விளைபொருட்களை தங்கள் விளைநிலங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரவும் கட்டப்பட்டு உள்ள பாலத்தினை நேரில் பார்வையிட்டார்.

Next Story