தம்மம்பட்டியில் வாழை இலை விலை உயர்வு


தம்மம்பட்டியில் வாழை இலை விலை உயர்வு
x
தினத்தந்தி 11 Sep 2019 10:30 PM GMT (Updated: 11 Sep 2019 8:20 PM GMT)

தம்மம்பட்டியில் வாழை இலை விலை உயர்ந்துள்ளது.

தம்மம்பட்டி,

தம்மம்பட்டி மற்றும் செந்தாரப்பட்டி, வாழக்கோம்பை, சேரடி, செங்காடு, பெரப்பன்சோலை, மாவாறு, உலிபுரம், கொண்டையம்பள்ளி, செங்ககட்டு, பாலக்காடு, நரிப்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள், அதிகளவில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

வாழை இலைகளை விவசாயிகள், தம்மம்பட்டியில் உள்ள வாழை மண்டிகள், மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இதனை மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருமண மண்டபங்கள், உணவகங்களில் வாழை இலைகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வாழைத்தார்களை விட, வாழை இலைகள் அதிக விலைக்கு விற்பனையாகிறது.

இந்த நிலையில் தேவை அதிகரிப்பு காரணமாகவும், வறட்சியினால் விளைச்சல் குறைவாக இருப்பதாலும் வாழை இலைகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இதனால் தம்மம்பட்டியில் உள்ள வாழை மண்டிகள் மற்றும் தினசரி மார்க்கெட்டுகளில் வாழை இலை விலை உயர்ந்து வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

தம்மம்பட்டியில் வாழை இலையின் தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு சிறிய அளவிலான இலை (டிபன் இலை) ஒன்று ரூ.2-ல் இருந்து ரூ.3-க்கும், சாப்பாடு இலை ஒன்று ரூ.4-ல் இருந்து ரூ.6 வரை விற்றது.

தற்போது திருமண முகூர்த்த நாட்கள் வருவதால் வாழை இலையின் தேவை அதிகமாக உள்ளது. மேலும் காது குத்து விழா, கோவில் கும்பாபிஷேகம் உள்பட பல்வேறு விழாக்கள் தொடர்ந்து நடக்க உள்ளதால் வாழை இலைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருகிறது. இதன்படி டிபன் இலை ரூ.3-ல் இருந்து ரூ.5 வரையும், சாப்பாடு இலை ரூ.8 முதல் ரூ.9 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story