மதிப்பு கூட்டல் எந்திர மையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்


மதிப்பு கூட்டல் எந்திர மையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 11 Sep 2019 10:30 PM GMT (Updated: 11 Sep 2019 9:18 PM GMT)

விவசாயிகள் கூட்டுப்பண்ணைய உற்பத்தியாளர் மதிப்பு கூட்டல் எந்திர மையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் வட்டாரத்தில் 2017-18ம் ஆண்டு கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் எஸ்.புதூர், சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டாரங்களில் உள்ள 9 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை இணைத்து கற்பக விநாயகர் கூட்டுப்பண்ணைய உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது. வேளாண்மை பொறியியல் துறை மூலமாக வழங்கப்பட்ட வேளாண்மை விளைபொருட்கள் மதிப்பு கூட்டல் எந்திர மையம் மற்றும் கூட்டுப்பண்ணைய உற்பத்தியாளர் நிறுவனத்தை கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி மரச்செக்கு மூலமாக தயாரிக்கப்பட்ட கடலை எண்ணெய், நல்லஎண்ணெய், விளக்கெண்ணெய், ஆகிய எண்ணெய் வகைகளை விற்பனை செய்து, கலெக்டர் வணிகத்தை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் பேசியதாவது:- மாவட்டத்தில் விவசாயத்திற்கு எஸ்.புதூர் வட்டாரத்தில் அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. விவசாயிகள் விளைந்த பொருட்களை அப்படியே விற்பனை செய்யாமல் அதனை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது விவசாயிகளுக்கு அதிக லாபத்தை தரக்கூடியதாகவும், பொதுமக்களுக்கு தரமான பொருட்களையும் விற்பனை செய்ய முடியும்.

உதாரணமாக கடலை பயிரிட்டு அதை அப்படியே விற்பனை செய்யாமல் அதனை மரச்செக்கு மூலமாக ஆட்டி கடலை எண்ணையாக தயார் செய்து விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கு லாபத்தையும், பொதுமக்களுக்கு தரமான பொருட்களையும் வழங்க வழி கிடைக்கிறது. மேலும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள குடிமராமத்து பணி திட்டங்கள் முழுமையாக நிறைவேற அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிமராமத்து பணியில் தங்களது பாசனக்கண்மாய்களை முழுமையாக சீரமைத்து, விவசாய பணிகளுக்கு ஏதுவாக அமைத்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பாசனக் கண்மாயிலும் மடைகள், கழுங்குகள் அனைத்தும் சீர்செய்யப்படுகிறது. அதே போல் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை நல்ல முறையில் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், வேளாண்மை துணை இயக்குனர் வெங்கடேசன், வேளாண்மை செயற்பொறியாளர் இளங்கோவன் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் கற்பக விநாயகர் கூட்டுப்பண்ணைய உற்பத்தியாளர் நிறுவன துணை தலைவர் சேகர் நன்றி கூறினார்.


Next Story