வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15-ந் தேதி வெளியிடப்படும் - கலெக்டர் டி.ஜி.வினய் தகவல்


வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15-ந் தேதி வெளியிடப்படும் - கலெக்டர் டி.ஜி.வினய் தகவல்
x
தினத்தந்தி 12 Sep 2019 10:00 PM GMT (Updated: 12 Sep 2019 6:27 PM GMT)

வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற அக்டோபர் 15-ந் தேதி வெளியிடப்படும் என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.

அரியலூர், 

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2020 தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் வாக்காளர் பட்டியலை எவ்விதமான தவறும் இல்லாத வகையில் செம்மைப்படுத்தும் பொருட்டு, முன் திருத்தப்பணியாக கடந்த 1-ந் தேதி முதல் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணி வருகிற 30-ந் தேதி வரை நடைபெறும்.

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின்படி வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் Vot-er He-lp Li-ne என்ற கைப்பேசி செயலி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மையங்கள், பொது இ-சேவை மையங்கள், மாவட்ட தொடர்பு மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 உள்பட பல்வேறு வசதிகள் மூலம் தாங்களாகவே சரிபார்த்துக்கொள்ளலாம்.

மேலும் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தில், பொதுமக்கள் தாமாக முன்வந்து இந்திய கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, அரசு அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், உழவர் அடையாள அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை உள்பட இந்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளித்தும், இணையதளம் அல்லது கைபேசி செயலியில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளடு செய்து பதிவேற்றம் செய்தும் தங்களது பெயர் விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதிசெய்து கொள்ளலாம். மேலும் வாக்காளர் சரிபார்ப்பு பணி வருகிற 30-ந் தேதி நிறைவடைந்ததும், வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர் ) 15-ந் தேதி வெளியிடப்படும்.

அதன்பின்னர் வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை பெயர் திருத்தம் செய்வதற்கான மனுக்களை அளிக்கலாம். மேலும் நவம்பர் மாதம் 2, 3, 9 மற்றும் 10-ந் தேதிகளில் விடுமுறை நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இத்திட்டத்துக்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் தற்போது உள்ள 587 வாக்குச்சாவடிகளில் ஆயிரத்து 500-க்கு மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி ஏதும் இல்லாததால், புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கம் ஏதுமின்றி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. இந்த வரைவு வாக்குச்சாவடிகள் தொடர்பாக ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் ஏதேனும் இருப்பின் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் வருகிற 19-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) முருகன், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி, தேர்தல் தனி வட்டாட்சியர் சந்தரசேகரன், வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story