ஊத்தங்கரையில் விஷம் குடித்து விட்டு கோர்ட்டுக்கு வந்த தம்பதியால் பரபரப்பு


ஊத்தங்கரையில் விஷம் குடித்து விட்டு கோர்ட்டுக்கு வந்த தம்பதியால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Sep 2019 11:00 PM GMT (Updated: 12 Sep 2019 6:28 PM GMT)

ஊத்தங்கரையில் விஷம் குடித்து விட்டு கோர்ட்டுக்கு வந்த தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊத்தங்கரை,

ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). வக்கீல். இவர் குடும்பத்துடன் ஊத்தங்கரையில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிருந்தா (30). இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி சாமல்பட்டி அம்பேத்கர் நகரில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் பரசுராமன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் சரவணன் கைதாகி கோர்ட்டில் ஜாமீன் பெற்று இருந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பரசுராமனின் மனைவி மணிமேகலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து இறப்பதற்கு முன் மணிமேகலை கொடுத்த வாக்குமூலத்தில் சரவணன் தரப்பை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதனால் விஷம் குடித்ததாகவும் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் சாமல்பட்டி போலீசார் சரவணனை கைது செய்ய முயன்றனர்.

இந்தநிலையில் நேற்று சரவணனும், அவரது மனைவி பிருந்தாவும் விஷத்தை குடித்து விட்டு ஊத்தங்கரை கோர்ட்டுக்கு வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story